திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் மீது நடவடிக்கை ஏன்?- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் விளக்கம்…!
திருச்சி விமான நிலையம் அருகே உள்ளது, எஸ்ஆர்எம் ஹோட்டல். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இந்த ஓட்டலை குத்தகை பாக்கிக்காக நேற்று அதிகாரிகள் மூட சென்றனர். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு அதிகாரிகள் ஓட்டலை இழுத்து மூடினர். இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கரில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ் ஆர் எம் ஹோட்டல் நிறுவனத்திற்கு கடந்த 1994ம் ஆண்டில் 30 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டது. கடந்த 1994 ஜூன் 14ம் தேதி குத்தகைக்கு விடப்பட்ட ஒப்பந்தம் 2024 ஜூன் 13ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. 1994 ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணைப்படி
அந்த நிலத்திற்கு சந்தை விலையின் அடிப்படையில், ஆண்டுக்கு 7 சதவீதம் குத்தகை தொகை கணக்கிட்டு 30 ஆண்டுகளுக்கு 47 கோடியே 93 லட்சத்து, 85 ஆயிரத்து 941 ரூபாய் மாவட்ட கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் குத்தகைதாரர் இதுவரை 9 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரத்து 104 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். மீதமுள்ள 38 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரத்து 837 ரூபாய் இதுவரை செலுத்தப்படவில்லை.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகைத் தொகையை செலுத்தாமல் எஸ் ஆர் எம்., நிறுவனம் ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. குத்தகை ஒப்பந்தப்படி 30 ஆண்டு காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படுகிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்ததாரர் கூறக்கூடாது. குத்தகை முடியும் நாளில் குத்தகைதாரர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நிலம் மற்றும் கட்டிடங்களை எவ்வித சேதாரமும் இன்றி ஒப்படைக்க வேண்டும். மேலும், நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று கடந்த மே 2ம் தேதி குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை குத்தகைதாரர் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. உண்மை நிலை இவ்வாறு இருக்க சில ஊடகங்களில் எஸ்ஆர்எம் ஹோட்டல் சார்பாக தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குத்தகை காலம் முடிவடைந்தாலும் குத்தகைதாரர் முறையாக முழுமையான குத்தகைத் தொகையை செலுத்தாததாலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படி முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments are closed.