ஸ்ரீரங்கம் ஒய் ரோடு அருகில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம், பட்டா கத்தியை காட்டி ரூ.30 ஆயிரம், 2 கிராம் தங்க மோதிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை 3 பேர் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவானைக்காவலை சேர்ந்த ரெங்கநாதன் (வயது 23), சித்திக் (20), முகேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். இதில் ரெங்கநாதன் மீது ஸ்ரீரங்கம், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், சிறுகனூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி என்பதும் தெரியவந்தது.
எனவே, ரெங்கநாதன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் , அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை அளித்தார். அதனை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்தியப்பிரியா ஐ.பி.எஸ். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரெங்கநாதனை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ரெங்கநாதனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.