திருச்சி மாவட்டத்தில் அனைவரும் அடிக்கடி வந்து செல்லும் இடம் துறையூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை. இங்கு விபத்துக்கள் மற்றும் மரணங்கள் ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர் .மேலும் இப்பகுதியில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு கூட எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு இல்லை என்பது வேதனைக்குரியது. சுற்றுலா தலம் என்று அறிவிக்கப்பட்ட உடனே வனத்துறையினரும் சுற்றுலாத்துறையினரும் பொதுமக்களிடம் கல்லா கட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர் ஆனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான சுத்தமான குடிநீரோ,கழிப்பிட வசதியோ மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறையோ ஏதும் இல்லை. ஏதேனும் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் குறைந்தது 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரிக்கும் நிலை இருந்து வருகிறது. நேற்று 22 ம் தேதி கும்பகோணம் பகுதியை சேர்ந்த சர்புதீன் அனார் பேகம் என்பவருடைய மகன் மாலிக் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு வந்துள்ளார் .இவருக்கு நீச்சல் தெரியாத நிலையில் நண்பர்கள் குளிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் தவறி நீரில் விழுந்துள்ளார் . நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய மாலிக்கை நண்பர்கள் மீட்டனர். உடனடியாக முதலுதவி சிகிச்சை கொடுப்பதற்கு போதிய வசதி இல்லாததால் மாலிக் பரிதாபமாக உயிரிழந்தார் என்று நண்பர்கள் கூறுகின்றனர் .இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் புளியஞ்சோலையில் நிரந்தர காவல் நிலையம் திறக்க வேண்டும் என்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் அவ்வாறு திறக்க தவறினால் சுற்றுலா மையத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
