Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 4- வது வார்டு குடியிருப்பு பகுதியில் புதர் மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் தொல்லை…!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு ஸ்ரீரங்கம் அருள் முருகன் கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தான் சிங்கப்பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு காலி மனைகளில் முட்கள் அதிகளவு வளர்ந்து புதர் போல மண்டி கிடக்கிறது. இதனால், பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் அங்கு சுற்றித் திரிகின்றன. சில சமயங்களில் பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால், தினமும் அச்சத்துடனேயே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த புதர் வழியாகத்தான் பள்ளி மாணவ- மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால், அவர்களை விஷப் பூச்சிகள் தீண்டவும் வாய்ப்பு உள்ளது. காலி மனையில் உள்ள முட்புதர்களை சம்பந்தப்பட்டவர்களே அகற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி நிர்வாகமோ, நகராட்சி நிர்வாகமோ அகற்றி அதற்கான செலவினத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே, அருள் முருகன் கார்டன் பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்