திருச்சி, இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது- மார்ச் 2ம் தேதி தேரோட்டம்…!
திருச்சி, சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால், அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீன லக்னத்தில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று(09-02-2025) தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் கிராமமக்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பூத்தட்டுகளுக்கு கோவில் குருக்கள் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தார்.இதையடுத்து ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தட்டுகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.வருகின்ற 16- ந்தேதி 2 வது வார பூச்சொரிதல் விழாவும், 23 ந்தேதி 3 வது வார பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வருகின்ற மார்ச் 2 ந்தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் பணியாளர்கள், கோவில் குருக்கள் மற்றும் பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.