Rock Fort Times
Online News

திருச்சி, கோட்டை மற்றும் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும்- அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று(17-05-2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், திருச்சி, கோட்டை மாரீஸ் மேம்பால பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் கால தாமதமாகி வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியுள்ளனர். அதேபோல ஜங்சன் அரிஸ்டோ மேம்பால பணிகளும் விரைவில் முடிவையும். மெட்ரோ ரயில் சேவை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முதலில் அமைய உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு சர்வே எடுப்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளனர். திருச்சி ஜங்சன் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு ஆறு வழி சாலையாக பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றார். தொடர்ந்து பாஜக கூட்டணியைபோல, இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என சிதம்பரம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்