பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராமராஜ் (26). மீன் வியாபாரியான இவர் திருச்சி, உறையூர், குழுமணிசாலையில் அமைந்துள்ள காசி விளங்கி மீன் சந்தையில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து பெரம்பலூரில் சில்லரை விற்பனை செய்வது வழக்கம்.நேற்று ( 29.10.2023 ) அதிகாலை அவர், மீன் கொள்முதல் செய்வதற்காக தனது நண்பர்களுடன் காரில் வந்தார். திருச்சி உறையூர், காசி விளங்கி மீன் சந்தை முன்பு காரை நிறுத்தி இறங்கி சந்தைக்குள் நுழைய முயன்றபோது, அங்கு திடீரென 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மக்கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராமராஜனை சுற்றி வளைத்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என்றாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டிச்சாய்த்தது.
இதில் ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை சந்தைக்கு மீன் வாங்க வந்திருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமராஜ் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தொடர்ந்து போலீசாா் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூரில் கடந்த 2021 ஆவது ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி செங்குட்டுவன் என்பவரை ராமராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த வழக்கு பதிவாகி விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.
மேலும் பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது. அவர் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் ரௌடி பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் செங்குட்டுவன் கொலைக்கு பழிக்குப் பழியாக ராமராஜ் கொலைசெய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் உத்தரவின்பேரில், உறையூர் போலீசார் சங்குப்பேட்டை பிரகாஷ் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து, 4 தனிப்படைகள் அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.