அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று(06-01-2025) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அதனை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)வில்சன் ராஜசேகரன், தேர்தல் வட்டாட்சியர் செல்வகணேஷ், திமுக சார்பில் நகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,பகுதி செயலாளர் மோகன்தாஸ், காஜாமலை விஜய், இளங்கோ, கவுன்சிலர் கமால் முஸ்தபா, முன்னாள் கவுன்சிலர் தினகரன் மற்றும் அதிமுக சார்பில் பகுதி செயலாளர் பூபதி, நாகநாதர் பாண்டி, ரோஜர், சிபிஐ கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிவா, சிபிஐஎம் சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் இளங்கோ உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 01.01.2025 -ஐ தகுதி நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10. 2024 முதல் 30.11. 2024 வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் 2025 ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 33 ஆயிரத்து 924 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 23 லட்சத்து 47 ஆயிரத்து 852 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில், அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உள்ளது.இந்த தொகுதியில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 29 வாக்காளர்களும், குறைவான வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 853 ஆகவும் உள்ளது. 18,773 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றி வரும் 1228 வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 365 பேர். 9 சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 640, பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 10 ஆயிரத்து 847 வாக்காளர்கள் என மொத்த திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 47 ஆயிரத்து 852 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருச்சி மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விபரங்களை இறுதிவாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், தங்களது https://electoralsearch.eci.gov.in/ https://voters.eci.gov.in/ இணைதள முகவரியிலும் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.