திருச்சி நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க கூட்ட அரங்கில் திருச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மதியழகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த 14-ந்தேதி நடந்து முடிந்த லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.25 கோடி தகுதியான நபர்களுக்கு கிடைத்துள்ளது.
இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தான் அதிகம். திருச்சி மாவட்டத்தில் 56 ஆயிரம் வழக்குகள் உள்ளன. இதில் சிவில் வழக்குகள் 65 -க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது. வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிவில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதி மன்றம் அனைத்து மாவட்டங்களில் வக்கீல் அலுவலக வளாகம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான பணிகள் நடக்கிறது. இதில் நமது மாவட்டத்தில் விரைவில் வக்கீல்கள் அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், இணைச் செயலாளர்கள் அப்துல்சலாம், சந்தோஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி ,சுதர்சன், மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.

Comments are closed.