தற்போது தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருச்சியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. எங்கெல்லாம் மழைநீர் தேங்கியுள்ளதோ அங்கெல்லாம் மின் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பருவ மழையை எதிர்கொள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் மின்மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி, ராஜீவ் காந்தி நகர், ஆதிநகர், பாத்திமா நகர், ஏயுடி நகர், கிருஷ்ணாபுரம், ஆர்.எம்.எஸ். காலனி, கோரை ஆறு, சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதிகளிலிருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி மின் மற்றும் டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மண்டல தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் உதவி ஆணையர்கள் சண்முகம், சென்னுகிருஷ்ணன், உதவிசெயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.