திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு: அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது…!
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட தயாரானது. இந்த பஸ்சை திருச்சி அரியமங்கலம் குவளக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் (42) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ரமேஷ் என்பவர் பணியில் இருந்தார். அப்போது பஸ்சில் இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் தள்ளாடியபடி ஏறினர். இதை கவனித்த கண்டக்டர், பஸ்சில் இருந்து கீழே இறங்குமாறு கண்டித்தார். இதனால் கண்டக்டருக்கும் அந்த இரண்டு வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் தாக்கினர். இதைப் பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு அந்த வாலிபர்களை தட்டி கேட்டார். அவரையும் அந்த வாலிபர்கள் தாக்கினர். இதில், டிரைவர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய தஞ்சை மாவட்டம் கீழக்கரை நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் ( 20), கும்பகோணம் கஸ்தூரிபாய் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (21)ஆகிய இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் பஸ் கண்டக்டர், டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.