திருச்சி இ.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சொந்தமாக லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவருடன் தேனி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன், ராமச்சந்திரன், பிரபாகரன் ஆகியோர் தொழில் ரீதியாக நண்பர்களாக உள்ளனர். அவர்கள் தேனியில் இரண்டு லாரிகள் விற்பனைக்கு வருவதாக முருகேசனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து தேனிக்கு சென்று விற்பனைக்கு வந்துள்ள லாரியை
பார்வையிட்ட அவர், தனது நண்பர்களிடம் பைனான்ஸ் மூலம் ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் முருகேசனுக்கு லாரியை வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் முருகேசன், லாரி வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதன்பேரில் அவர்கள் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளனர். மீதம் உள்ள ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். மீதமுள்ள தொகையை முருகேசன் கேட்ட போது அவர்கள் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின்பேரில் தங்கபாண்டியன், ராமச்சந்திரன், பிரபாகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.