Rock Fort Times
Online News

திருச்சி: வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கண்ணனூரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் அறை எடுத்து கூலி வேலை செய்து வருகின்றனர். விஸ்வகர்மா தினத்தை ஒட்டி நேற்று (17.09.2023) அவர்கள் வேலைக்கு செல்லாமல் அறையில் ஓய்வெடுத்தனர். அப்போது திடீரென அவர்களது அறைக்குள் புகுந்த மர்ம கும்பல், தூங்கிக் கொண்டிருந்த வட மாநில இளைஞர்களை கட்டையாலும், ஆயுதங்களாலும் கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், சுனில் (36 ), நரேஷ் ( 32 ), ராகுல் (23 ) ஆகியோருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வர்துன்னா ( 24 ), ராஜேஷ் (29 ) மலேஷ் ( 18 ) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த வட மாநில தொழிலாளர்களை துறையூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜம்புனாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளமுருகு, குபேந்திரன், ஜீவா, சூரியபிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர், கண்ணனூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மது வாங்கி வந்து வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறை முன் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட வடமாநிலத்தவர் மீது பூரி தேய்க்கும் மரக்கட்டையை கொண்டு தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்