Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி…!

திருச்சி, காஜாமலை நகர் ஆர்விஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்டு ஜங்ஷன் பாரதியார் சாலை ஜென்னி பிளாசா அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக மாநகராட்சி குப்பை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் அந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் ஆனந்தராஜ் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அருகில் தூய்மை பணியில் ஈடுபட்ட கோபி என்ற வாலிபர் லேசான காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆனந்தராஜுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்