Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய்- தந்தை தற்கொலை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா(35). இந்த தம்பதியருக்கு ஆராதனா, (9) ஆலியா ( 3) என்ற இரு பெண் குழந்தைகள். விக்டோரியா ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தான் நடத்தி வந்த துணிக்கடையில் அலெக்சுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடி விட்டதாக கூறப்படுகிறது. வியாபாரத்திற்காக பல இடங்களில் கடன் வாங்கியதால் அவருக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அலெக்ஸுக்கும், அவருடைய மனைவி விக்டோரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடன் சுமையால் தவித்து வந்த தம்பதியர், நேற்று(13-05-2025) இரவு தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை அவர்களது வீட்டுக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது நான்கு பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து கடன் சுமை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்