விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் நேற்று இந்துக்களின் வீடுகளிலும், போலீசார் அனுமதித்த இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள் அனைத்தும் மூன்றாம் நாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி (20.09.2023)-ம் தேதி மதியம் 2 மணி முதல் (21.09.2023)-ம் தேதி அதிகாலை 6 மணி வரை கீழ்கண்டவாறு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துறையூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து சென்னை பைபாஸ்ரோடு வழியாக பழைய பால்பண்ணை ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்ஜிஆர் சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. தியேட்டர், கரூர் பைபாஸ் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். பின்னர், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. தியேட்டர், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதுபாலம், எம்ஜிஆர் சிலை வழியாக மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல வேண்டும்.
லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய கொள்ளிடம் பாலம், டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, ஜே.ஏ.சி கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்ற, வேண்டும். பின்னர் ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்ரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, ஒய் ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண்-6, டிரங்க்ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி ரோடு, ஜேஏசி கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மீண்டும் ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, ஒய் ரோடு சந்திப்பு, சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆா் சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. சந்திப்பு, மேரிஸ் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர், துவாக்குடி சென்று மீண்டும் பால்பண்ணை ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, எம்.ஜி.ஆா் சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், மாரீஸ் தியேட்டர் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.
கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவேரிப் பாலத்தில் திருப்பி விடப்பட்டு முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், டிவிஎஸ் டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். மேற்கண்ட தகவல் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.