வட மாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு மே- 5ம் தேதி சுற்றுலா ரயில் இயக்கம்!
ஐ.ஆர்.சி.டி.சி தென் மண்டல அதிகாரி தகவல்!
இந்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் கே. ரவிக்குமார் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:
இந்தியன் ரயில்வே சுற்றுலா பயணிகளுக்காக பிரத்தியேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4 குளிர்சாதன பெட்டிகள், 7 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலம் சென்னை சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா பயணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுற்றுப்பயணம் வருகிற மே 5-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் பூரி, கோனார்க்,கொல்கத்தா ,கயா ,வாரணாசி அயோத்தி, அலகாபாத் ஆகிய இடங்களை பார்வையிட முடியும். இதில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்ய ரூ. 35 ஆயிரத்து 651 கட்டணமாகவும், சாதாரண ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்ய ரூ. 20 ஆயிரத்து 367 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு தங்குமிடம், பார்வையிடும் இடங்களில் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவு, இன்சூரன்ஸ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை வழங்குவார்கள். இந்த ரயில் வழித்தடம் கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை சிதம்பரம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படுகிறது. இதில் மேற்கண்ட பகுதிகளில் புண்ணிய ஸ்தலங்களில் பொதுமக்கள் பரிகாரங்கள் செய்து கொள்ளலாம். 24 புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார். பேட்டியின் போது துணை பொது மேலாளர் சுப்பிரமணி திருச்சி மேலாளர் பாசித் மற்றும் பலர் உடன் இருந்தனர்.