தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதாவது சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட மற்ற இடங்களுக்கு ஜனவரி 9ம் தேதி 1,050 பேருந்துகளும், ஜனவரி 10ல் 1,030 பேருந்துகளும், ஜனவரி 11ல் 225 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் ஜனவரி 12ல் 2,200 பேருந்துகளும், ஜனவரி 13ல் 2,790 பேருந்துகளும், ஜனவரி 14ல் 2,920 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 21,535 பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் திரும்புவதற்கு வசதியாக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் www.tnstc.in என்ற அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் 94440 18898 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

Comments are closed.