திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியையொட்டி, வருகிற 20-ந் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாயிலின் முன் அமைந்துள்ள கண்டா மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத மலையப்ப சுவாமி கண்டா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி அமர்த்தப்படுவார். சேனாதிபதி விஷ்வக்சேனரும் சுவாமியின் இடதுபக்கத்தில் தெற்கு திசை நோக்கி இன்னொரு பீடத்தில் அமர்த்தப்படுவார். அதன் பின்பு சுவாமிக்கு சிறப்பு பூஜை, பிரசாத நிவேதனங்கள் ஆகியவை ஆகம முறையில் நடைபெறும். இதனுடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவடையும். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி சகஸ்ர தீபஅலங்கார சேவையில் பங்கேற்று, கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தீபாவளி ஆஸ்தானம் காரணமாக 20-ந் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை ஆகியவை தேவஸ்தானம் சார்பில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோமாலை, அர்ச்சனை சேவைகள் ஏகாந்தமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.