திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன். பிரபல ரவுடியான இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவரை கடந்த மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். அதேபோல, நத்த மாடிப்பட்டியைச் சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பவரை திருவெறும்பூர் போலீசார் பிடித்து எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி என்ற தினேஷ்குமார் (வயது 30) என்பவரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நான் திருந்தி வாழ விரும்புகிறேன். தன்னை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்படி ஏதாவது நேர்ந்தால் தமிழக காவல்துறையே அதற்கு பொறுப்பு என பரபரப்பு ஆடியோ வெளியிட்டு அது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க திருவெறும்பூர் செல்வபுரத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஷ்ணு என்கிற வெங்கடேஷ்( 29 )என்ற ரவுடியும் திருவெறும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் திருச்சி மேல கல்கண்டார்கோட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சசிகுமார் (39) என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது,
சூப்பர் மார்க்கெட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சசிகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணம் கொடுக்க மறுத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என அரிவாளைக் காட்டி வெங்கடேஷ் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருவது ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.