தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுக் குறைந்து மேற்கு – வடமேற்கு திசையில், இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம் கனமழை காரணமாகத் தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழை எச்சரிக்கை காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், தேனி, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் இன்று ( டிச.13 ) நடைபெறுவதாக இருந்த பருவ தேர்வுகளை ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகள் செயல்படும் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக தேர்வுகளை ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Comments are closed.