Rock Fort Times
Online News

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் ‘களை’ எடுக்கப்படுவார்கள்- திருச்சியில் துரை வைகோ எம்.பி.பேட்டி!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று( ஜூலை 11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. வைகோவை “பொய் கோ” என வைகை செல்வன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் இயக்கங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறியுள்ளார். அதற்காக அதிமுக தீண்ட கூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ அவர் இழிவு படுத்தி எதுவும் கருத்து கூறவில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். இன்னும் ஒரு டஜன் பேர் அவ்வாறு உள்ளார்கள். அதில் ஒருவர் திமுகவில் சேர்ந்து விட்டார். மதிமுகவில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் முடிவு எடுப்பார். மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை. வைகோ கோபப்படுவதால் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.
பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என நாடாளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது. அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ. பத்திரிக்கையாளர்களுக்காக முதலில் நிற்கும் நபர் வைகோ. கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக கேட்கவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரெஹையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்