தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் அ.ம.மு.க.வும் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இன்று(05-01-2025) நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி, மணப்பாறை, துறையூர், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அமமுக நிர்வாகிகள்,பகுதி, ஒன்றிய செயலாளர்கள், வட்ட, வார்டு, செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு முன்னதாக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிபிஐ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சொன்ன கருத்து தான் அனைத்து கூட்டணி கட்சிகளும் சொல்ல விரும்புகிறது. இடி அமீன், ஹிட்லர் ஸ்டைலில் முதலமைச்சர் ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருப்பது என்பது உண்மை தான். காவல்துறையினர் ஏவல் துறையாக, கூலிப்படையாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் 22 வயது இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் நிச்சயமாக ஜெயிக்காது.
மீண்டும் ஆட்சிக்கு வராது. இதனால்தான் அவர்களது கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனையை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பணமிக்க, ஆட்சி அதிகாரம் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு ஜனநாயக கூட்டணி தான் நல்ல தீர்வாக இருக்கும். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் நான் தொடர்பு கொள்ளவில்லை. 2021ம் ஆண்டு பழனிச்சாமி மேல் இருந்த அதிருப்தியால், கோபத்தால் திமுகவிற்கு பொதுமக்கள் வாக்களித்தார்கள். பழனிச்சாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.வருகிற 2026ல் அவர் கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். பழனிச்சாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இதுவரை தப்பித்து வருவது திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதால் தான். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.