தற்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே சங்க கால தமிழ் நூல்களில் ஏராளமான குறிப்புகள்…! * மருத்துவ நிபுணர் டாக்டர் அலீம் பேச்சு
திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மூளை நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் எம்.ஏ. அலீம் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், மனித வாழ்க்கையில் கனவு என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. அதாவது மூளை இயக்கத்தின் ஒருவித அதிர்வுகள் காரணமாக மூளையில் பதிந்துள்ள நினைவுக் குறிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவுகள் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு குறிப்புகள். ஆனால், இந்த மருத்துவ ஆய்வுகளுக்கு முன்பே சங்ககால நமது தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், அகத்தியம் , கலித்தொகை, ஆண்டாள் நாச்சியார், திருப்பாவை உள்ளிட்டவைகளில் மிகவும் அழகாக, காட்சிகளுடன் தொடர்புபடுத்தி கனவுகள் குறித்து குறிப்பிட்டிருப்பது நம்மை மட்டுமல்ல மருத்துவ உலகையே வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. நமது மூளையில் பதிவான நினைவுகளை தூக்கத்தின் போது வெளிப்படுத்தும் விதமாக, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் செயல்படுத்த முடியாத சில நிகழ்வுகளை கூட செயல்படுத்தியதாக காட்சிப்படுத்துவது கனவு. இது மருத்துவ ஆய்வுகளுக்கு பின்னர் வெளியிடப்பட்ட முடிவு. ஆனால் இவற்றுக்கு முன்பே கனவுகள் குறித்து தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் கூறப்படாத உலக விஷயங்களே கிடையாது என்பது உலகறிந்த விஷயம். இதில் கனவையும் விட்டு வைக்கவில்லை திருவள்ளுவர். கனவுக்கென , “கனவு நிலை அறிதல்” என தனி (122 வது) அதிகாரமே படைத்துள்ளார்.அதில் உள்ள பத்து பாடல்கள் மூலம் கனவு நிலை குறித்தும் மூளையில் நரம்பியல் செயல்பாடுகளால் ஏற்படும் அதிர்வலைகள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விவரிக்கிறார். அதில் நினைவில் நடக்காததை கனவில் நடைபெறுவதாக அவர் தெரிவித்திருப்பது மருத்துவ உலகில் மூளை நரம்பியல் துறையினரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதவிர காமத்துப்பாலில் சில அதிகாரங்களில் சில பாடல்களிலும் கனவு குறித்து குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். மதுப்பழக்கம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் உட்கொள்ளும்போது அவற்றின் மூலமாக சில வகையான கெட்ட கனவுகள் ஏற்படுவதும் உண்டு. கெட்ட கனவுகள் ஏற்படுவதை யாரும் விரும்புவதில்லை.எனவே, அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் மூளை நரம்பியல் துறையில் உள்ளன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக விலங்குகளும் கனவுகள் காண்கின்றன என்பதையும் சங்க கால நூல்கள் தெரிவித்துள்ளன என்று கூறினார். நிகழ்வில் தமிழ் சங்க பெ.உதயகுமார், முனைவர்கள் அ.சையத் சாகிர் அசன், சு. செயலா பதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Comments are closed.