26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்…!
தமிழகம் முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 32,000 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் பெண் பணியாளர்களை பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் மாலை 6 மணிக்கு மேல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று E-KYC விரல் ரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படுவதை கண்டித்தும், ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடி 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் இன்று(11-03-2024) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் முத்து, துணைத் தலைவர்கள் தங்கராஜ், தர்மலிங்கம், இணை செயலாளர் பெரியக்கான், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பணியாளர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து பணியாளர்களும் வருகிற 25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிப்பது என்பது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.