Rock Fort Times
Online News

பூங்காவிற்கு  சூட்டப்பட்ட அண்ணாவின் பெயர் நீக்கம்… எடப்பாடி பழனிசாமி கண்டனம்! 

அண்ணா பூங்காவின் பெயரை திமுக அரசு நீக்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ஆட்சிக்கு வரும்போது “அண்ணா வழி நடப்போம்” என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான். மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு. ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை. அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை! தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் “அறிஞர் அண்ணா பூங்கா” என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, “ஸ்டெம்” பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது  கொடுர எண்ணமல்லவா?. இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான், அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் அதிமுக தோற்றுவிக்கப்படக் காரணம். அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா  பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்? “அறிஞர் அண்ணா பூங்கா”, தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்