Rock Fort Times
Online News

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் இன்று தொடங்கியது- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை…!

ஒரு பாவமும் செய்யாத இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெரு விழாவாக (ஈஸ்டர்) கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவர். அதுமட்டுமின்றி வீடுகளில் திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்ற எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளும் இருக்காது. தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, கஷ்டப்படும் மக்களுக்கு பொருள் உதவி செய்வது, அவர்களுக்கு ஆறுதல் சொல்வது போன்ற நற்செயல்களிலும் ஈடுபடுவர். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்.20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது.

அந்தவகையில் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று(05-03-2025) தொடங்கியது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டின்போது, கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை பாதிரியார்கள் ‘மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே’ என்று சொல்லியவாறு இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டார். சாம்பல் புதன்கிழமையொட்டி திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம், மெயின்கார்ட்கேட் லூர்து அன்னை பேராலயம், பாலக்கரை சகாய மாதா தேவாலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது பங்கு மக்கள் நெற்றியில் அருட்தந்தையர்கள் சாம்பலில் சிலுவை அடையாளம் வரைந்தனர்.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்