திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (51). இவர் இன்று( ஜூன் 19) முசிறியிலிருந்து குளித்தலை வழியாக அரசு ஜீப்பில் திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஜீயபுரம் அருகே உள்ள கடியாகுறிச்சி பகுதியில் ஜீப் வந்து கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஜீப்பும் பயங்கர வேகத்தில் மோதிக்கொண்டன. இதில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆர்டிஓ ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுநர் பிரபாகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீப்பின் உள்ளே சிக்கிக் கிடந்த தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் முசிறியில் வருவாய் கோட்டாட்சியராக பணியில் சேர்ந்துள்ளார். அவர் இன்று திருச்சிக்கு பணி நிமித்தமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது இறப்பு சக ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.