தூத்துக்குடியில் பரபரப்பு:- கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை பிடிக்க முயன்ற போது காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்றவர் மீது துப்பாக்கி சூடு…!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவருடைய மகள் ராமதேவி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவர்களை கொடூரமாக கொலை செய்து விட்டு அவர்களிடமிருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்து சென்றது. இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முனீஸ்வரன் என்ற நபரை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர் ஜான்சன் ஆகியோர் முனீஸ்வரனை பிடிக்க முயன்றபோது அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் காவலர்களை வெட்டினார். இதில் அவர்கள் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்டதில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜான்சன் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ADVERTISEMENT…👇
Comments are closed.