புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மலையாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் மெய்ஞான செந்தில்குமார்(வயது 28). இவர் சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராமில் உள்ளிட்டவற்றில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் நுழைந்த பாம்பு ஒன்றை கட்டையால் அடித்து கொன்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை பார்த்த கீரனூர் சரக வனத்துறை அதிகாரியான பொன்னம்மாள் தலைமையிலான வனத்துறையினர் மெய்ஞான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாம்பை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பேரில், பாம்பை அடித்து கொன்று வீடியோ பதிவு செய்து வெளியிட்ட குற்றத்திற்காக வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின்கீழ் மெய்ஞான செந்தில்குமாரை கைது செய்து விராலிமலை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மெய்ஞான செந்தில்குமாரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Comments are closed.