ஸ்ரீரங்கம் அரங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்…!
இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று( மே 29) திருச்சி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுர நுழைவு வாயிலில் கோவிலின் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் ஸ்ரீராம் பட்டர் ஆகியோர் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவில் யானை ஆண்டாளுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கி ஆளுநரின் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, இராமானுஜர் உள்ளிட்ட கோவில்களுக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்டு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். திருச்சியில் இன்று இரவு ஓய்வெடுக்கும் ஆளுநர் நாளை முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கு நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து மதுரை செல்கிறார். ஆளுநரின் வருகையை ஒட்டி கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments are closed.