கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 முக்கிய தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை” என்ற பெயரில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த தொகையை பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். அதேபோல வருமான வரி செலுத்துபவர்கள், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோர் போன்றோருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவர், உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம், அதில் தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்தநிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 3 முக்கிய தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள். மேலும் இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். கணவரால் கைவிடப்பட்ட 50 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
Comments are closed.