திருச்சியில் ரூ.4 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: மகனே திருடிவிட்டு நாடகமாடினாரா?- போலீசார் தீவிர விசாரணை!
திருச்சி பெரிய கடைவீதி அருகே உள்ள கள்ளத்தெரு பகுதியில் வசிக்கும் வங்கி ஊழியர் ஒருவர் நேற்று( மே 26) வழக்கம்போல பணிக்கு சென்று இருந்தார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். எப்போதும் இரும்பு கதவை பூட்டிவிட்டு சாவியை உள்ளே இருக்கும் மரக் கதவில் உள்ள ஆணியில் மாட்டிவிட்டு செல்வது வழக்கமாம். இதனை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள் நேற்று வங்கி ஊழியரின் மனைவி கோவிலுக்கு சென்றவுடன் சாவியை எடுத்து வீட்டினை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சத்தை கொள்ளையடித்ததாகவும், அப்போது முதல் மாடியில் இருந்த வங்கி ஊழியர் மகன் சிலம்பு( பெயர் மாற்றப்பட்டுள்ளது) திடீரென கீழே வந்தபோது சிலம்பு கையில் பிளேடால் கிழித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிலம்பு, போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது . இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது ஆன்லைனில் பணத்தை இழந்த அவர் தனது வீட்டில் தானே திருடிவிட்டு நாடாகமாடியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலம்பு வீடு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.