விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பானை சின்னம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பானை சின்னத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தையும் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல, நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு மக்களவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.22 சதவீத வாக்குகளை பெற்றது.
மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட 8 சதவீத வாக்குகள் வேண்டுமென்ற நிலையில், 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது. ஆனால் நாம் தமிழர் கட்சி கேட்ட புலி மற்றும் நிலத்தை உழும் விவசாயி சின்னங்களை ஒதுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. வேறு சின்னம் கேட்டு மனு செய்யும்படி நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Comments are closed.