ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்…!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பகல்பத்து விழா 31-ந் தேதி ஆரம்பமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்தின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை யொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து நீண்ட முடியுடன் பெண் கோலம் பூண்டு, (மோகினி அலங்காரம்), பகல் பத்து மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினார். நம்பெருமாள் வெண்ணிற பட்டு புடவை அணிந்து வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் சௌரிக் கொண்டை அணிந்து அதில் கலிங்கத்துராய், நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி காதில் வைர மாட்டல், வைரத் தோடு, மூக்குத்தி அணிந்து திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவள மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவள வளையல், தாயத்து சரங்கள், திருவடியில் தங்க சதங்கை, தண்டைகள் பின் சேவையில் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி, அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை அணிந்திருந்தார். மேலும், ராக்கொடி அணிந்து, திருக் கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, சூர்ய பதக்கம் என ஏராளமான திருவாபரணங்கள் சாற்றி வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அரையர் சேவையுடன் பொது ஜன சேவையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பகல்பத்து மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசலை அடைந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு7 மணிக்கு கருடமண்டபம் சென்று சேருகிறார். அதனைத்தொடர்ந்து ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார். நம்பெருமாள் மோகினி அலங்கார சேவையையொட்டி மாலை 4.30 மணிக்கு மேல் முத்தங்கி சேவை கிடையாது.
Comments are closed.