Rock Fort Times
Online News

மஹாவீர் ஜெயந்தி மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…* தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

மஹாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10-04-2025 வியாழக்கிழமை (மஹாவீர் ஜெயந்தி), 11-04-2025 (வெள்ளிக்கிழமை) 12-04-2025 (சனிக்கிழமை), 13-04-2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14-04-2025 (தமிழ் புத்தாண்டு) என தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றன. அன்றைய தினங்களில், சென்னை மற்றும் பிற இடங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் இன்று (ஏப்ரல் 9) மற்றும் 11, 12-ம் தேதிகளில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று புதன்கிழமை 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை அன்று 525 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று புதன்கிழமை 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து இன்று புதன்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், 14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்