Rock Fort Times
Online News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- * தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு…!

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி மார்ச் 28 (வெள்ளி), 29 (சனி), 30 (ஞாயிறு) மற்றும் 31ம் தேதி (ரம்ஜான் பண்டிகை) என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி 460 பேருந்துகளும், 29ம் தேதி 530 பேருந்துகளும் ஆக மொத்தம் 990 பேருந்துகளும், மற்றும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி அன்று 100 பேருந்துகளும், மற்றும் 29ம் தேதி அன்று 95 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 28 மற்றும் 29ம் தேதி அன்று தலா 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்