கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன் ஜாமின் மனு மீதான மனுவை தள்ளுபடி செய்தது. கஸ்தூரியின் கருத்து தொடர்பாக நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனால், கஸ்தூரி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அவர் இன்று(16-11-2024) ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

Comments are closed.