Rock Fort Times
Online News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- வது மாநில மாநாடு கடந்த 3ம் தேதி விழுப்புரத்தில் துவங்கியது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 80 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று(05-01-2025) நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் ஆக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர்,தற்போது அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். தமிழக மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தவர் ஆவார். சண்முகம், தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து சட்டப்போராட்டம் நடத்தியவர். கடந்த ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொண்டவர். கூட்டத்தில் பாலகிருஷ்ணன் பேசுகையில், 3வது முறையாக மாநில செயலாளர் ஆவதற்காக தி.மு.க.,வை விமர்சித்ததாக கூறுகிறார்கள். பொதுக்கூட்டத்தில் பேசுவதை வைத்தா கட்சி கூட்டத்தில் முடிவு செய்வார்கள். எனக்கு மீண்டும் பதவி வருவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அதனை வேண்டாம் எனக்கூறிவிட்டேன். கட்சியை பொறுத்தவரை 72 வயதை எட்டியவர்கள் மாநில குழுக்களில் இடம்பெற முடியாது என்றார். கே.பாலகிருஷ்ணன் தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அவரை கண்டித்து தி.மு.க.,வின் கட்சி இதழான முரசொலியில் தலையங்கம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்