செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று(23-04-2025) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில்ஆஜரான வக்கீல், சாட்சிகளை கலைப்பார் என அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். இதை நீதிபதிகள் நிராகரித்து, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்றும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை எனவும், அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறிய காரணத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வருகிற 28ம் தேதி திங்கட்கிழமை தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Comments are closed.