அரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, லாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க இந்திய ஒன்றிய பாஜக அரசினைப் போல, அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான போக்குவரத்துக் கழகம், கடந்த 50 ஆண்டுகளாக 20 ஆயிரம் பேருந்துகளுடன் ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து இயங்கி வருகின்றது. போதிய வருமானம் இல்லாத குக்கிராமங்களிலும், லாப – நட்டத்தை கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையானதாக கொண்டு இயங்கிவரும் அரசுப் பேருந்துகள் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், அரைநூற்றாண்டுகாலமாக அடுத்தடுத்து தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுக்கடங்காத ஊழல் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தில் இயங்குவதோடு, பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கூடக் கொடுக்க முடியாத அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
தாங்கமுடியாத கடன்சுமை காரணமாகப் போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக நிதியமைச்சர், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்தது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களும், அரசின் அம்முடிவிற்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அதனையெல்லாம் சிறிதும் பொருடப்படுத்தாமல், முதற்கட்டமாக சென்னையில் 500 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க தற்போது முடிவு செய்திருப்பது பொதுமக்களிடத்திலும், போக்குவரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும். பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, கொடுங்கோன்மை பாஜக அரசு செய்வதைப்போலவே, சென்னை மாநகருக்குட்பட்ட பேருந்து நிலையங்களை பல நூறுகோடிகள் செலவில் நவீன மயமாக்கப்போவதாக அறிவித்துவிட்டு, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது. மோடி அரசினை அப்படியே பின்பற்றும் திமுகதான், பாஜகவின் உண்மையான ‘B’ TEAM என்பது மீண்டும் ஒருமுறை இதன் மூலம் உறுதிப்பட்டுள்ளது என்றாா். ஆகவே, அரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, லாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தங்களின் பணிப்பாதுகாப்பிற்காகவும் ‘அரசுப் போக்குவரத்து கழகத்தை’ மெல்ல மெல்ல தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசின் முடிவை எதிர்த்து போக்குவரத்து சங்கங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை தெரிவிப்பதோடு, போராட்டம் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.