கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: திருச்சி, புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பேண்டு வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று(02-06-2025) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு மாதம் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதால் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு இருந்தன. ஆசிரிய, ஆசிரியைகள் முன்கூட்டியே பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் பெட்டி, படுக்கைகள், பக்கெட் போன்றவற்றுடன் வருகை தந்தனர். அவர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் ரோஜா மலர் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் இருந்த நிலையில் அந்த பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
அந்தவகையில் திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்( எம்பிஎஸ்) தலைமை ஆசிரியை அம்சவள்ளி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தலைமையில் மேளதாளங்கள் முழங்கவும், இனிப்பு வழங்கியும் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். மேலும், பள்ளி வளாகத்தில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஏற்கனவே அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதவிர புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புகளை கண்டறிய வண்ண ரிப்பன்கள் கைகளில் கட்டி விடப்பட்டது. விடுமுறையை மகிழ்வுடன் கழித்த மாணவர்கள் அதே மகிழ்வுடன் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்கிற அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அதேபோல வகுப்பறைக்குள் வந்த மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் இன்முகத்துடன் உற்சாகமாக உரையாடினர்.
Comments are closed.