பாலசமுத்திரம் அரசு பள்ளி மாணவர் இறப்பிற்கு இரங்கலை தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் பாதுகாப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த, தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன், மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.மேலும், இந்த, நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
