சேலத்தில் பெண் கொலை வழக்கு: போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்…!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர் ஆடு, மாடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில்,
கடந்த 20.05.2025 ம் தேதி, ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்ற சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. இந்த கொலையைச் செய்தவர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்வையிட்டு சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில், மூதாட்டியை கொலை செய்தது, கட்டிகாரனூரைச் சேர்ந்த நரேஷ்குமார் (34) என்பது தெரியவந்தது. இவர், சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவரை பிடிக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்தார். இதனால், போலீசார் நரேஷ்குமாரின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவருக்கு சங்ககிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.