சாலை விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த விமலா(28) இன்று (28.11.2024) காலை 9.30 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக பின்புறமாக வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பெண் காவலர் விமலா உயிரிழப்பு என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். பெண் காவலரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். காவலர் விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அவருடன் பணி புரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.