Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரி ஆறுமுகம், சரவணனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதோடு முன்பணமாக ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின்படி சரவணன் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7 -ம் தேதி ஆறுமுகத்தை நேரில் சந்தித்து ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே ஆறுமுகம் மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்றார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் இன்று(18-06-2025) ஆறுமுகத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்