Rock Fort Times
Online News

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. இந்த சூழலில் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் மட்டுமே உரிய சான்றுகளையும் பதிவேற்றி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று( ஜூன் 27) காலை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அறிவித்தபடி, 2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மேலும்,
ஜூலை 7-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொறியியல் தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்