சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். கடைசி முயற்சியாக சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுடன், அரசு தரப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்தார். அதையும் ஆசிரியர்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில் இன்று ( 05.10.2023 ) அதிகாலை உண்ணாவிரதம் இருந்த 2,400 ஆசிரியர்களை போலீஸார் திடீரென்று கைது செய்தனர். ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை கைது செய்தது நியாயமல்ல என்று முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும், அதன் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், தொகுப்பு ஊதியம் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும், ரூ.10 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.