Rock Fort Times
Online News

உ.பி.யில் மின்வாரிய ஊழியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!

உத்தர பிரதேசத்தில், வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாதமாக மின்வாரிய தொழிலாளர்களும், பொறியாளர்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய உத்தரபிரதேச பாஜக அரசு போராட்டம் நடத்தக்கூடிய தலைவர்களை, பொறியாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, முக்கிய நிர்வாகிகளை வீட்டு காவலில் வைப்பது, இரவு நேரத்தில் வீடுகளில் சோதனை செய்வது, குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிப்பது போன்ற மிகப்பெரிய அடக்குமுறை கையாளப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அடக்கு முறையை கைவிடக் கோரியும், போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரியும்
மின் வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் நாடு தழுவிய அளவில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக இன்று (மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்
ஆரோக்கியசாமி, சிவசெல்வன், எம்ளாய்ஸ் பெடரேஷன் பாலசுப்பிரமணியன், இன்ஜினியர் சங்கம் பழனியாண்டி, நடராஜன், பிரசன்னா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக இன்ஜினியர் சங்கம் ரெங்கநாதன் நன்றி கூறினார். இதே போன்று துறையூர், அய்யம்பாளையம், வெள்ளனூர், அரியமங்கலம், மணப்பாறை போன்ற பிரிவு அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்