திருச்சி,பஞ்சப்பூரில் வியாபாரிகளின் ஆலோசனை இன்றி மார்க்கெட் கட்டினால் போராட்டம்..!- கலெக்டர் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முடிவு !
திருச்சி,பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற மே 8ம் தேதி 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி வரவுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை தற்போது மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதன் அடிப்படையில், வருகிற 9ம் தேதி திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், வியாபார சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் பஞ்சபூரில் காய்கறி மார்க்கெட் கட்டினால் நிச்சயம் நாங்கள் போராடுவோம் என்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடைபெற்ற மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன், ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், ஆலோசகர் எஸ்.பி.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுஅவர்கள் பேசியதாவது., வருகிற 9ம் தேதி திருச்சி பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். பஞ்சப்பூரில் அமையுள்ள காய்கறி மார்க்கெட்டிற்கான திட்டம் கடந்த 2024ம் ஆண்டு ஜூனில் தயாரிக்கப்பட்டது.அதில் புதிய மார்க்கெட் வடிவமைப்பு சரியாக இல்லையென்றும், வாகனங்கள் வந்து செல்ல மற்றும் வியாபாரத்திற்கான இடவசதி போதுமானதாக இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்தோம். அப்போது எங்களிடம் பேசிய கலெக்டர், புதிய மார்க்கெட் கட்டுவதற்கான திட்டத்திலுள்ள குளறுபடிகள் சரி செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், இப்போது வரை வியாபாரிகள் சங்கங்களை அழைத்து பேசவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் பேசலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். கலெக்டர் உடனான பேச்சுவார்த்தையில் புதிய காய்கறி மார்கெட் கட்டுமானம் குறித்த சரியான தீர்வு கிடைக்கவில்லை. எனவே பஞ்சப்பூர் பகுதியில் புதிய மார்க்கெட் கட்டும் முன், அனைத்து வியாபாரிகளையும் அழைத்து மார்க்கெட் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது ? வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வந்து செல்வதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன ? என்று தெளிவுபடுத்த வேண்டும். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி வருவதற்கு முன்பு எங்களை அழைத்து பேசாவிட்டால் நிச்சயம் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
Comments are closed.